"என்னை மேலும் சீண்ட வேண்டாம்" – விவாகரத்து விவகாரத்தில் மௌனம் கலைத்த நடிகர் ரவி மோகன்
பிரபல தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), தனது மனைவியுடனான விவாகரத்து நடைமுறைகள் முழுமையாக முடிவடையும் வரை தாம் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் கண்ணீர் மல்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் சைபர் புல்லிங் (Cyberbullying) ஆகியவற்றால் தாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
"தற்போதைய சூழ்நிலையில் என்னால் புதுமையான எதையும் யோசிக்கவோ, நடிப்பில் கவனம் செலுத்தவோ முடியவில்லை. எனக்கு நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து கிடைத்து, எனது வாழ்க்கை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்புகிறதோ, அதுவரை நான் புதிய படங்களில் நடிக்க மாட்டேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகத் தனது குடும்பப் பிரச்சினை குறித்து மௌனம் காத்து வந்த அவர், முதன்முறையாக இந்த ஊடக சந்திப்பில் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
"சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். இதுவரை என்னை மிகவும் சாதுவானவன் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இனி அப்படி இருக்கப் போவதில்லை.
என்னை அவமானப்படுத்துவதற்கும், சீண்டிப் பார்ப்பதற்கும் ஒரு எல்லை உண்டு" என அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். "என்னுடைய 23 ஆண்டுகால கடின உழைப்பால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.
ஆனால், தற்போது எனது சொந்தப் பிள்ளைகளைக்கூட என்னைச் சந்திக்க விடாமல் தடுக்கிறார்கள். அவர்கள் மெய்க்காப்பாளர்களுடன் (Bodyguards) நடமாடும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது" என ரவி மோகன் கண்ணீருடன் குற்றம் சாட்டினார்.
அத்துடன், இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்திப் பேசப்படும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் மற்றும் அவரது தரப்புக்கு எதிராக நடத்தப்படும் இணையவழித் தாக்குதல்களையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நடிகர் ரவி மோகனின் இந்த திடீர் முடிவும், செய்தியாளர் சந்திப்பில் அவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவமும் ஒட்டுமொத்தத் தமிழ் திரையுலகினரிடமும், அவரது ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே )